புதுடெல்லி: “காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்றுள்ளது சட்டவிரோதம் இல்லையா?” என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவை தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அளிக்கும்படி ராகுல் காந்தியிடம் கேட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1983-ம் ஆண்டுதான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெற்றுள்ளார். அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலிலேயே சோனியா காந்தி பெயர் இடம்பெற்றது. அப்போது அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பின்னர் கடந்த 1982-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருந்து சோனியா காந்தி பெயர் நீக்கப்பட்டது. இது வாக்காளர் சட்டப்படி அப்பட்டமான விதிமீறல் இல்லையா? அதன்பின் மீண்டும் 1983-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் சோனியா பெயர் சேர்க்கப்பட்டது.
தகுதியற்ற மற்றும் சட்டவிரோத வாக்காளர்களை முறைப்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி இப்போது ஆர்வம் காட்டுகிறாரே, அப்படியானால், சோனியா காந்தியின் விதிமீறல் குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.
புதுடெல்லி மக்களவை தொகுதியில் கடந்த 1980-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை கடைசி நாளாக கணக்கிட்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது வரை சோனியா காந்தி இத்தாலி குடியுரிமையைத்தான் வைத்திருந்தார். அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். அவரது அதிகாரப்பூர்வ அரசு இல்லமான எண் 1, சப்தர்ஜங் சாலை, டெல்லி முகவரி அளிக்கப்பட்டு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, மேனகா காந்தி ஆகியோர் பெயர்களுடன் சோனியா காந்தியின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். அதன்படி சோனியாவின் வாக்காளர் வரிசை எண் 388, வாக்குச் சாவடி எண் 145 ஆக பதிவாகி உள்ளது.
இத்தாலி குடியுரிமை பெற்ற சோனியா, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே இந்திய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தது சட்டத்தை மீறிய செயல் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.
ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பிறகு இந்திய குடியுரிமை பெறுவதற்கு 15 ஆண்டுகள் சோனியா காந்தி காத்திருந்தது ஏன்? இது வெளிப்படையான வாக்காளர் சட்டத்தை மீறுவதல்லாமல், வேறு என்ன? இவ்வாறு அமித் மாளவியா கூறியுள்ளார்.