புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21. மாநிலங்களவை செயலாளர்தான் தேர்தல் அதிகாரி. வேட்புமனுக்களை வேட்டாளர்கள், மாநிலங்களவை அறை எண் 28-ல் தேர்தல் அதிகாரி அல்லது துணை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். பொது விடுமுறை இல்லாத நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும். இதற்கான வைப்புத் தொகை ரூ.15,000.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெறும். போட்டி இருந்தால் தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும். வாக்காளர்கள் காலை 10 மணி முதல் 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் F-101ல் வாக்குகளை செலுத்தலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவாகும் வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த பதவியிடம் காலியாக இருப்பதை கடந்த ஜூலை 22 வெளியிடப்பட்ட அறிவிப்பில் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இந்தச் சூழலில் தற்போது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.