புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த 22-ம் தேதி பதவி விலகினார். அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இருந்தது. இந்நிலையில் உடல்நிலை காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தேர்லுக்கான அறிவிக்கை விரைவில் வெளியாகும்.
இதன் பிறகு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செயல்படும் கவுன்ட்டரில் வாக்காளர் பட்டியல் கிடைக்கும்” என்று கூறியுள்ளது. மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன உறுப்பினர்களும் குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள்.