பாரமுல்லா: சவுரிய சக்ரா விருது பெற்ற காவலரின் தாய், பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என ஜம்மு காஷ்மீர் போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவைச் சேர்ந்தவர் முடாசிர் அகமது ஷேக். ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றிய இவர் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். இதற்காக இவருக்கு மறைவுக்குப்பின் சூர்ய சக்ரா விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
இவரது தாய் ஷமீமா அக்தர். இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் 45 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய காஷ்மீர் பகுதிக்கு தனது 20 வயதில் வந்து விட்டார். இங்கு வந்தபின் முகமது மகசூத் என்ற காவலரை திருமணம் செய்தார். இவர்களது மகன்தான் சவுரிய சக்ரா விருது பெற்ற முடாசிர் அகமது ஷேக்.
இந்நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் எல்லாம் திரும்பி அனுப்பும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர். அப்போது பாகிஸ்தான் அனுப்பப்படும் நபர்களின் பட்டியலில் ஷமீமா அக்தர் பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. சூர்ய சக்ரா விருது பெற்ற காவலரின் தாய் பாகிஸ்தான் திருப்பி அனுப்படுகிறார் என்ற தகவல் வெளியானதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள்விடுத்தனர்.
இதையடுத்து ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா போலீஸார் அளித்த விளக்கத்தில், ‘‘ பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படும் நபர்களின் பட்டியலில் ஷமீமா அக்தர் பெயர் இல்லை’’ என தெரிவித்தனர்.