புதுடெல்லி: ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், தேர்தல் நடைபெறாமல் இருந்ததால், குலாம் நபி ஆசாத் உள்பட 4 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகள் 2021-ம் ஆண்டு நிறைவடைந்த பிறகு, புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் காலியாக இருந்தன.
இந்நிலையில், தற்போது ஜம்மு – காஷ்மீருக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்து, மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு தேவையான உறுப்பினர்கள் உள்ளதால் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு 3 தேர்தல் தனித்தனியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சஞ்சீவ் அரோரா, பஞ்சாப் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.இந்நிலையில், பஞ்சாபில் காலியாக இருக்கும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக். 24-ல் வாக்குப்பதிவு: ஜம்மு – காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் காலியாகவுள்ள மொத்தம் 5 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கும் வரும் அக்டோபர் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். போட்டி நிலவும் பட்சத்தில் அக்டோபர் 24-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.