பூஞ்ச்: காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் மீட்கப்பட்ட 42 வெடிக்காத குண்டுகளை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸார் நேற்று செயலிழக்கம் செய்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரில் காஷ்மீரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது.
இதில் எல்லை கிராமங்களில் உள்ள மக்கள் பலர் இறந்தனர். பூஞ்ச் பகுதியில் மட்டும் 12 பேர் உயிரிழந்தனர், 42 பேர் காயம் அடைந்தனர். வீடுகளும் சேதமடைந்தன.
இந்நிலையில் இங்கு வெடிக்காத குண்டுகளும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அவற்றை சேகரித்து செயலிழக்கும் செய்யும் பணி பூஞ்ச் மாவட்டத்தின் ஜுல்லாஸ், சலோட்ரி, தராத்தி மற்றும் சலானி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டனர். மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி 42 குண்டுகளை பாதுகாப்பு படையினர் செயலிழக்கம் செய்தனர்.