லக்னோ: போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவுவதாக கூறி ஒரு கும்பல் ரூ.5 கோடி நிதி திரட்டியுள்ளது. ஆனால் இந்தப் பணத்தை சொந்தப் பயன்பாட்டுக்கு மடை மாற்றியுள்ளது. இந்தப் பணம் தேசவிரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் பிவாண்டியில் 3 பேரை உ.பி. காவல் துறையின் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) கைது செய்துள்ளது. முகமது அயான், ஜைத் நோட்டியார், அபு சுபியான் என்ற இந்த மூவரும் 22 வயதுடையவர்கள். பிவாண்டியில் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள்.
இந்த மோசடி பிவாண்டி அல்லது உ.பி.யில் மட்டும் நடைபெறவில்லை. 20 மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. இதுவரை கிடைத்த மின்னணு மற்றும் நிதி ஆதாரங்களின்படி, கிரீஸ் நாட்டில் இருக்கும் ஒருவரால் இந்த மோசடி திட்டமிடப்பட்டு, அரங்கேற்றப்பட்டுள்ளது.
உ.பி. வங்கிக் கணக்குகளில் இருந்து மேற்கொள்ளப்பட்ட 50 பரிவர்த்தனைகள் தொடர்பாக உளவுப்பிரிவு அளித்த தகவலின் அடிப்படையில் ஏடிஎஸ் விசாரணை நடத்தியது. இதில் இந்த மூவரும் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காசாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான உணர்வுபூர்வமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி இவர்கள் நிதி திரட்டியுள்ளனர். சட்டவிரோத செயல்களுக்கு நிதி பயன்படுத்தப்பட்டது உறுதியானால் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி. ஏடிஎஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.