புதுடெல்லி: கடந்த 2024-ம் ஆண்டு மகாராஷ்டிர தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் தொண்டர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறும்போது, “மகாராஷ்டிர தேர்தலின்போது மத்திய உள்துறை, தேர்தல் ஆணையம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆகியவை பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டன. காங்கிரஸ் சார்பில் தொண்டர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப அனுமதி கோரப்பட்டது. ஆனால் டிராய் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது” என்று குற்றம் சாட்டினர். இந்த சூழலில் காங்கிரஸின் குற்றச்சாட்டை டிராய் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
இதுகுறித்து டிராய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எஸ்எம்எஸ் அனுப்ப அனுமதி கோரி ஓர் அரசியல் கட்சி (காங்கிரஸ்) விண்ணப்பம் அளித்ததாகவும், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதை திட்டவட்டமாக மறுக்கிறோம். தனிநபர்களின் விண்ணப்பங்களை ஏற்பதோ, நிராகரிப்பதோ டிராயின் பணி கிடையாது.
சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களே (டிஎஸ்பி) எஸ்எம்எஸ் தொடர்பான விண்ணப்பங்களை பரிசீலிக்கின்றன. ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை. எஸ்எம்எஸ் அனுப்புவது தொடர்பான விண்ணப்பங்களை நாங்கள் பரிசீலிப்பது கிடையாது.
இவ்வாறு டிராய் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.