தாரங்: சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். ஒவ்வொரு கடையிலும் சுதேசி பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
மிசோரம், மணிப்பூர், அசாம் மாநிலங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். அன்றைய தினம் இரவு அசாமின் குவாஹாட்டி நகரில் அவர் தங்கினார்.
இதைத் தொடர்ந்து அசாமின் தாரங் நகரில் நேற்று காலை நடந்த விழாவில் ரூ.18,530 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சில திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: நான் தீவிர சிவ பக்தன். என் மீது அவதூறுகள் அள்ளி வீசப்படுகின்றன. இதை சகித்துக் கொள்கிறேன். என் மீது உமிழப்படும் விஷத்தை விழுங்கி விடுகிறேன். ஆனால் அசாமின் புகழ்பெற்ற பாடகர் பூபேன் அசாரிகா மீது காங்கிரஸார் அவதூறுகளை அள்ளி வீசுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு அசாம் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.
கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா, சீனா இடையே போர் நடைபெற்றது. இதன்பிறகு அப்போதைய பிரதமர் நேரு கூறிய வார்த்தைகள், வடகிழக்கு மாநில மக்களை காயப்படுத்தியது. அந்த காயங்கள் இன்றுவரை ஆறவில்லை.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஊடுருவல்காரர்கள், தேசவிரோதிகளுக்கு முழு ஆதரவு அளிக்கப்பட்டது. பாகிஸ்தானின் பொய்களை, அந்த கட்சி தனது கொள்கைகளாக பின்பற்றி வருகிறது. ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய ராணுவத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை. அதற்கு நேர்மாறாக பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளுக்கு அந்த கட்சி ஆதரவு அளித்தது. காங்கிரஸ் குறித்து இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அந்த கட்சியை பொறுத்தவரை வாக்கு வங்கிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. நாட்டு நலனில் துளியும் அக்கறை கிடையாது. இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த லட்சியத்தை எட்ட வடகிழக்கு முக்கிய பங்கு வகிக்க உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
‘கன்னியாகுமரியில் சுற்றினேன்’- பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கன்னியாகுமரியில் வாழ்ந்தேன். அப்போது கழுத்தில் காமோச்சா (துண்டு) அணிவதை வழக்கமாக கொண்டிருந்தேன். கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்தேன். அப்போது எனது சொந்த ஊர் அசாமா என்று கேள்வி எழுப்பினர். நான் குஜராத்தை சேர்ந்தவன் என்று விளக்கம் அளித்தேன்.
அசாமின் காமோச்சாவை மக்கள் அனைவரும் அடையாளம் கண்டு கொள்கின்றனர். இது சுதேசி பொருட்களுக்கு கிடைக்கும் மரியாதை. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் அபரிதமாக வளர்ச்சி அடையும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
உலகில் முதன்முதலாக மூங்கில் எத்தனால் ஆலை: அசாமின் கோலாகாட் மாவட்டம், நுமாலிகர் பகுதியில் ரூ.5,000 கோடியில் எத்தனால் ஆலை அமைக்கப்பட்டு உள்ளது. புதிய ஆலையை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அங்கு உலகில் முதல்முறையாக மூங்கிலில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து அசாம் அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவில் இதுவரை கரும்பு கழிவுகளில் இருந்தே எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் முதல்முறையாக அசாம் மாநிலத்தில் மூங்கிலில் இருந்து எத்தனால் தயாரிக்கப்பட உள்ளது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அசாம் விவசாயிகளிடம் இருந்து 5 லட்சம் டன் மூங்கில் வாங்கப்படும். இதன்மூலம் 50,000 டன் எத்தனால் உற்பத்தி செய்யப்படும். அதோடு 18,000 டன் பர்புரல், 11,000 டன் அசிடிக் அமிலம் ஆகியவையும் உற்பத்தி செய்யப்படும். புதிய ஆலையால் மூங்கில் சாகுபடி செய்யும் சுமார் 50,000 விவசாயிகள் பயன் அடைவார்கள். மேலும் நுமாலிகர் பகுதியில் ரு.7,200 கோடியில் பாலிப்புரோப்பிலீன் ஆலை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அசாம் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.