புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோத மனநிலையின் பிரதிபலிப்புதான் எமர்ஜென்சி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கிப் பேசியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவசர நிலையை அப்போது பிரகடனப்படுத்தியிருக்க வேண்டிய அவசியம் எழவில்லை.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோத மனநிலையின் பிரதிபலிப்புதான் எமர்ஜென்சி. அந்த ஒருவரால்தான் (மறைமுகமாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை குறிப்பிட்டார்) எமர்ஜென்சி நாட்டில் அமல்படுத்தப்பட்டது.
அதிகாரத்துக்கு ஆசைப்பட்ட காங்கிரஸ் கட்சி, ஜனநாயகத்துக்கு செய்த துரோகம்தான் இந்த அவசர நிலை பிரகடனம். அதிகாரம் சர்வாதிகாரமாக மாறும்போது, அதை தூக்கி எறியும் அதிகாரம் மக்களுக்கு உண்டு என்பதை இந்த நாள் நமக்குச் சொல்கிறது.
அவசரநிலை இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று. இந்திய மக்கள் இந்த நாளை அரசியலமைப்பு படுகொலை நாளாகக் கருதுகின்றனர்.
இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு உரிமைகள் மீறப்பட்டன. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது. பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக சேவை செய்பவர்கள், மாணவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவசரநிலை பிரகடனத்தின்போது மக்கள் கொதித்தெழுந்தனர். சர்வாதிகாரமிக்க காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அவர்கள் போராடினர். தலைமையிலிருந்து வெளியேறு என்று கோஷம் எழுப்பினர். எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடி தியாகம் செய்த அனைத்து ஹீரோக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா அதில் கூறியுள்ளார்.