பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடங்கி அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்க கூடாது என பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கை எழுந்தது. அமைச்சரவையிலும் எதிர்ப்பு எழுந்ததால் அதனை ரத்து செய்திருக்கிறோம். மக்களின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக நிலையை கண்டறிய மீண்டும் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த கணக்கெடுப்பு பணிகள் செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 60 கேள்விகள் தயாரிக்கப்பட்டு, அரசு ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிப்பார்கள். சுமார் 1.25 லட்சம் ஆசிரியர்கள் இப் பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் இறுதிக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பை வைத்து பாஜகவும் சில சாதி அமைப்புகளும் அரசியல் செய்கின்றன. என்றாலும் இதை ஒத்திவைக்கும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.