பெங்களூரு: மாம்பழ விவசாயிகளின் துயரத்துக்கு தீர்வு காணக் கோரி மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கு திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் குறிப்பாக கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் மாம்பழ சாகுபடி அதிகம் நடக்கிறது. பாரம்பரிய மாம்பழ விவசாயிகள் கடந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்தபோது டன் ஒன்றுக்கு ரூ.18,000 அளவுக்கு கூடுதல் விலை பெற்றனர். ஆனால், தற்போது மிகக் குறைந்த மகசூல் கிடைத்திருக்கும் நிலையில், கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4,000 மட்டுமே கிடைக்கிறது.
உற்பத்திச் செலவு முந்தைய ஆண்டை விட அதிகம் இருப்பதால், விவசாயிகள் பழங்களை மரத்திலேயே விட்டுவிட்டு, சாலைகளில் வீசி எறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது விவசாயிகள் அரசின் ஆதரவைக் கோரி வருகின்றனர். இந்நிலையில்,
பிரதமர் அன்னதாதா ஆய் சம்ரக்ஷண் அபியான் திட்டத்தின் கீழ் சந்தை தலையீட்டு விலையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தோட்டக்கலை ஒருங்கிணைந்த மேம்பாட்டு மிஷன் திட்டத்தின் கீழ் குளிர்பதன வசதிகள் மற்றும் மாம்பழக் கூழ் உற்பத்தி அலகுகளை அமைக்க வேண்டும். பழரச பானங்களில் 20 சதவீதம் பழரசக் கூழ் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்ற நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
பானப் பொருட்களில் செயற்கை ரசாயனங்கள் சேர்ப்பதற்கு பதிலாக இயற்கை பழரசத்தைப் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்காக இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நடுத்தர வணிகர்களின் சிண்டிகேட் அமைப்பை ஒழிக்க கடுமையான ஒழுங்குமுறை விற்பனை முறையை அமல்படுத்த வேண்டும்.
விவசாயிகளை ஒடுக்கும் நடுத்தர வணிகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நஷ்டத்துக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி மாம்பழத்தின் மகசூலை இந்த பருவத்தில் பாதுகாக்க வேண்டும். இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு எம்பி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.