பெங்களூரு: கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 82,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நேற்று மாலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 52,415 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 51,115 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 122.90 அடியாக உயர்ந்துள்ளது. இதே அளவுக்கு நீர் வரத்து தொடர்ந்தால் இன்னும் ஓரிரு தினங்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்து வருவதால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 31,142 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 31,083 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு மொத்தம் வினாடிக்கு 82,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் தமிழகத் துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே மைசூரு, மண்டியா, ராம்நகர் ஆகிய மாவட்டங்களில் காவிரி கரையோர கிராமங்களில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.