பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவை அடுத்துள்ள மலே மாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட கஜனூர் வனப்பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு ஒரு தாய் புலியும் அதன் 4 குட்டிகளும் இறந்து கிடந்தன.
அவற்றின் பக்கத்தில் இறந்த பசுவின் சிதைந்த உடலும் கிடந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்த போது, அந்த பசு, கோப்பு கிராமத்தை சேர்ந்த கோனப்பாவுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.
புலிகள் மற்றும் பசுவின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, புலிகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சரணாலயத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் கோப்பு கிராமத்தை சேர்ந்த மாது ராஜூவின் பசுவை புலி வேட்டையாடி கொன்றதால் இறந்த பசு உடலில் விஷத்தை கலந்து புலிகள் நடமாட்டம் உள்ள பகுதியில் வைத்துள்ளார். அந்த இறைச்சியை உண்ட புலிகள் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் கோப்பு கிராமத்தை சேர்ந்த மாதுராஜூ, அவரது நண்பர்கள் நாகராஜூ, கோனப்பா ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.