பெங்களூரு: கர்நாடகாவில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக 31 மாவட்டங்களிலும் உண்டு உறைவிட பள்ளிகளை அமைக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயர்வதால் அவர்களின் குழந்தைகளின் கல்வி வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் மாவட்டம்தோறும் உண்டு உறைவிட பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து கர்நாடக கட்டுமான தொழிலாளர் நல வாரியம், இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியது. இதனை ஏற்ற முதல்வர் சித்தராமையா, “கர்நாடகாவில் உள்ள 31 மாவட்டங்களிலும் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உண்டு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும்.
கடந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி, இதற்காக ரூ.1,125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.34 கோடி முதல் ரூ.38 கோடி வரை செலவிடப்படும். இந்த பள்ளிகளில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் இலவசமாக கல்வி கற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளார்.