புவனேஸ்வர்: ஒடிசாவில் காந்தமால் மாவட்டத்தின் சலகுடா பகுதியில் சேவாஸ்ரம் பள்ளி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி பயிலும் 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள், சக மாணவர்கள் தூங்கி கொண்டிருக்கும் போது, அவர்களின் கண் இமையில், உடனடியாக ஒட்டிக் கொள்ளும் பசையை (குயிக் ஃபிக்ஸ்) ஊற்றி குறும்புத்தனம் செய்தனர்.
இதில் 8 மாணவர்களின் இமைகள் ஒட்டிக் கொண்டன. அந்த மாணவர்கள் தூக்கத்தில் இருந்து எழும்போது வலி மற்றும் எரிச்சலில் கூச்சலிட்டனர். இதேக் கேட்டு வந்த விடுதி காப்பாளர் மற்றும் மாணவர்கள், அவர்களை மீட்டு உடனடியாக புல்பானி பகுதியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சரியான நேரத்தில் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதால், நிரந்தர பார்வையிழப்பு ஏற்படும் சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர். லேசான பாதிப்பு ஏற்பட்ட ஒரு மாணவன் மட்டும் வீடு திரும்பியுள்ளான். மற்ற மாணவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தையடுத்து காந்தமால் மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மனோரஞ்சன் சாகு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சக மாணவர்கள் கண்ணில் பசையை ஊற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.