புதுடெல்லி: ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த வரியை மேலும் உயர்த்துவேன் என்று நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவை தொடர்ந்து குறி வைத்து வருகின்றன. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்து வந்த நாடுகள், உக்ரைன் போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்க தொடங்கிவிட்டன.
அந்த இக்கட்டான நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தோம். இதற்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுக்க இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா கூறியது. இந்த விவகாரத்தில் இந்தியா மீது குற்றம் சுமத்தும் நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 2023-ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவுடன் 17.2 பில்லியன் யூரோ, கடந்த 2024-ம் ஆண்டில் 67.5 பில்லியன் யூரோ மதிப்பில் இருதரப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்த சூழலில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக இந்தியா மீது குற்றம் சாட்டுவது நியாயமற்றது, ஏற்றுக் கொள்ள முடியாதது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இரட்டை வேடம் போடுகின்றன. நாட்டின் நலன் மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.