புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற மிலாது நபி ஊர்வலத்தில் ‘ஐ லவ் முகமது’ என்ற பதாகை எடுத்து செல்லப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து பரேலியில் வன்முறை ஏற்பட்டது.
இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் ராஸ்வி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பரேலியில் தற்போது அமைதி நிலவுகிறது. அங்கு எந்த தொந்தரவும் இல்லை. பக்தி வெளிப்பாடு தனிப்பட்டதாக இருக்க வேண்டும். தெருக்களில் ஊர்வலமாக சென்று வெளிப்படுத்துவது தேவையற்றது.
முகமது நபி என்ற பெயருடன் அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள், கீழே மிதிபடவும், கிழிக்கப்படவும், இழிவுப்படுத்தப்படவும் கூடும். எனவே, அன்பை மனதில் வைக்க வேண்டும். அதேபோல் மற்ற மதங்களின் விழாக்கள் நடைபெறும் போது எதிர்ப்பு ஊர்வலம் செல்வது, போராட்டம் நடத்துவது போன்றவற்றை செய்யக் கூடாது. இவ்வாறு மவுலானா ஷகாபுதீன் ராஸ்வி கூறினார்.