புதுடெல்லி: ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய அவர், “ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து, லிக்டன்ஸ்டீன், நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி செய்யப்பட்டது. இந்த வர்த்தக ஒப்பந்தம் நாளை மறுநாள் (அக்டோபர் 1) முதல் அமலுக்கு வருகிறது.
வளர்ச்சியடைந்த நாடுகள் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆர்வமுடன் உள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நியூசிலாந்து, ஓமன், பெரு, சிலி ஆகிய நாடுகளுடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல் கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக உறவை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. செப்டம்பர் 22 அன்று அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்களின் தாக்கம் பல ஆண்டுகளுக்கு உணரப்படும்” என்று தெரிவித்தார்.