புதுடெல்லி: ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான ஊக செய்திகள் வெளியிடுவதை மேற்கத்திய ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சாரபு நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஏர் இந்தியா விமான விபத்து குறித்த இறுதி அறிக்கைக்காக அரசு காத்திருக்கிறது. அதுவரை மேற்கத்திய ஊடகங்கள் ஊகங்களை பயன்படுத்தி செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இந்தியாவில் கருப்புப் பெட்டித் தரவை வெற்றிகரமாக டிகோட் செய்த விமான விபத்து புலனாய்வு பணியகத்தை (ஏஏஐபி) பாராட்ட வேண்டும்.
இந்தியாவிலேயே தரவுகளை மீட்டெடுக்கும் அற்புதமான பணியை அவர்கள் செய்துள்ளனர். முன்னதாக, தரவுகளை மீட்டெடுக்க கருப்பு பெட்டியை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. முதல்கட்ட அறிக்கையும் நமக்கு கிடைத்துள்ளது.
முழுமையான அறிக்கை கிடைக்கும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். இறுதி அறிக்கை வரும் வரை எந்த கருத்தையும் அரைகுறையாக புரிந்துகொண்டு கருத்து தெரிவிப்பது நல்லதல்ல. பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம். இவ்வாறு ராம் மோகன் தெரிவித்தார்.