புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: எஸ்எஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ராம்லீலா மைதானத்தில் அமைதியாக போராட்டம் நடத்திய தேர்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது வெட்கக்கேடானது மட்டுமல்ல, அது ஒரு கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளம்.
வாக்குகளைப் பெறுவதற்காக அரசாங்கம் முதலில் தேர்தல்களில் மோசடிகளைச் செய்தது, பின்னர் தேர்வுகளில் முறைகேடுகளை அனுமதித்தது, அதைத் தொடர்ந்து வேலைகளை வழங்குவதில் தோல்வியடைந்தது, இறுதியில் குடிமக்களின் உரிமைகள் மற்றும் குரல்களை நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கவில்லை. ஏனெனில் அது அவர்களின் வாக்குகளைச் சார்ந்தது அல்ல. மக்கள் பயப்படாமல் உறுதியாக நின்று போராட வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைத் திருடுவது மோடி அரசின் பழக்கமாகிவிட்டது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் எஸ்எஸ்சி தேர்வு மோசடிக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது மோடி அரசின் கைப்பாவை காவல்துறை நடத்திய கொடூரமான தடியடி மிகவும் கண்டிக்கத்தக்கது’’ என்று தெரிவித்துள்ளார்.