புதுடெல்லி: டெல்லியில் எம்.பி.க்களுக்காக கட்டப்பட்டு உள்ள 184 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு மத்திய அரசு சார்பில் டெல்லியில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.
இதன்படி மத்திய அமைச்சர்களுக்கு பிரிவு 4-ம் வகை பங்களாக்கள் ஒதுக்கப்படுகின்றன. இதேபோல 2-ம் முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிரிவு 6, 7-ம் வகை பங்களாக்கள், வீடுகள் வழங்கப்படுகின்றன. முதல்முறை எம்.பி.க்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.
இந்த சூழலில் தலைநகர் டெல்லியில் உள்ள பாபா கரக் சிங் மார்க் பகுதியில் எம்.பி.க்களுக்காக 184 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வீடும் 5,000 சதுர அடி கொண்டதாகும். நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டு இருக்கும் புதிய வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
எம்.பி.க்களுக்காக 4 அடுக்குமாடிகளில் 184 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த அடுக்குமாடிகளுக்கு கிருஷ்ணா, கோதாவரி, கோசி, ஹூக்ளி நதிகளின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன. இவை கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வளிக்கும் 4 பிரதான நதிகள் ஆகும். எம்.பி.க்களுக்கான பழைய குடியிருப்புகள் பாழடைந்துவிட்டன. அவர்கள் விரைவில் புதிய வீடுகளுக்கு குடிபெயர்வார்கள். முந்தைய ஆட்சிக் காலத்தில் டெல்லியில் எம்.பி.க்கள் தங்க போதிய வீடுகள் இல்லை.
ஆனால் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014 -ம் ஆண்டு வரை எம்.பி.க்களுக்காக ஒரு வீடு கூட கட்டப்படவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றது. இதன் பிறகு எம்.பி.க்களுக்கு வீடுகள் கட்ட முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதன்படி கடந்த 2014-ம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 350 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் நாடு முழுவதும் 4 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டி உள்ளோம். நாடு முழுவதும் ஏராளமான மருத்துவக் கல்லூரிகளை கட்டி உள்ளோம். டெல்லியில் கட்டப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கான புதிய குடியிருப்பு ஒரே இந்தியா, உன்னத இந்தியாவை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. பல்வேறு மொழிகளை பேசும் எம்.பி.க்கள் இங்கு தங்க உள்ளனர். அப்போது அவரவர் பிராந்திய மொழிகளில் இருந்து சில வார்த்தைகளை ஒருவருக்கொருவர் கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.