பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே ‘வலுவான பிணைப்பு’ இருப்பதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும், விரைவில் துணை முதல்வராக உள்ள டி.கே. சிவகுமார் முதல்வராவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “நாங்கள் இருவரும் நல்ல உறவோடு இருக்கிறோம். யார் என்ன சொன்னாலும், எங்களுக்கு இடையேயான பிணைப்பு வலுவாகவே உள்ளது.” என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவுக்கு அருகிலேயே நின்றார். அப்போது தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக சிவக்குமாரின் கையை பிடித்து, உயர்த்திக் காண்பித்தார் சித்தராமையா. அப்போது சித்தராமையாவின் கருத்தை ஆமோதிக்கும் வகையில், டி.கே.சிவகுமாரும் புன்னகைத்தார்.
கர்நாடகாவில் தலைமை மாற்றம் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இன்று பிற்பகல் 2 மணி முதல் கட்சியின் மாநில அலுவலகத்தில் சுமார் 100 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனித்தனியாக சந்திக்க உள்ளார்.
சுர்ஜேவாலாவின் சந்திப்பு குறித்துப் பேசிய சித்தராமையா, “அவர் கர்நாடகப் பொறுப்பாளர் மற்றும் பொதுச் செயலாளர். அவர் எங்கள் எம்எல்ஏக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்று, அவர்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா என்று ஆலோசனை நடத்துகிறார். இது அவருடைய வேலையாகும். பாஜக பொய்களைப் பரப்புவதில் வல்லுநர்.” என்றார்.