புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் 4-வது நாளாக நேற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஆபரேஷன் சிந்தூர், அகமதாபாத் விமான விபத்து, பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி உள்ளிட்ட விவகாரங்களை மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க் கட்சி எம்பிக்கள் எழுப்பினர். அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அன்றைய தினம் இரு அவைகளும் முடங்கின. கடந்த 22, 23 ஆகிய தேதிகளிலும் இதே விவகாரங்களால் நாடாளுமன்றம் முடங்கியது.
இதைத் தொடர்ந்து 4-வது நாளாக நாடாளுமன்றம் நேற்று கூடியது. காலை 11 மணிக்கு மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பில்லா கூறும்போது, “சில எம்பிக்கள் அவையின் மாண்பை சீர்குலைத்து வருகின்றனர்” என்று கடுமையாக கண்டித்தார்.
எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் அவை தொடங்கிய 6 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியது அப்போது கிருஷ்ண பிரசாத் அவையை வழிநடத்தினார். அவர் கூறும்போது, “கோவா மாநில பழங்குடியினர் தொடர்பான மசோதா மீதான விவாதத்தை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறும்போது, “பழங்குடியினர் நலன் சார்ந்த மசோதா மீதான விவாதம் சுமுகமாக நடைபெற வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கோரினார். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை ஒத்திவைப்பு: மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் கூறும்போது, “6 எம்பிக்களுக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இதை கருத்தில் கொண்டு எம்பிக்கள் அமைதி காக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியை கைவிட்டனர். பகல் 12 மணிக்கு 6 எம்பிக்களின் வழியனுப்பு நிகழ்ச்சி தொடங்கியது. பகல் 12 மணி முதல் 12.30 வரை 6 எம்பிக்களும் அடுத்தடுத்து அவையில் பேசினர்.
அவர்கள் உரையை நிறைவு செய்ததும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் மாநிலங்களவை கூடியபோது மீண்டும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து 4-வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி உள்ளன.