புதுடெல்லி: ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இந்தியா பதலடி கொடுத்துள்ளது.
“ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்குவதுடன் மட்டுமல்லாமல், அவ்வாறு வாங்கிய எரிபொருள்களில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்துக்கு விற்கிறது. ரஷ்யாவின் போர் ஆயுங்களால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி இந்தியாவுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவுக்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரித்திருந்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் இந்தியா குறிவைக்கப்பட்டுள்ளது. உண்மையில், மோதல் வெடித்த பிறகு, வழக்கமாக கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பாவுக்கு திருப்பி விடப்பட்டதால் தான் ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக அந்த நேரத்தில் இந்தியாவின் இத்தகைய இறக்குமதிகளை அமெரிக்கா தீவிரமாக ஊக்குவித்தது.
இந்தியாவின் இறக்குமதிகள் என்பது இந்திய நுகர்வோருக்கு மலிவு விலையில் எரிபொருள் செலவுகளை உறுதி செய்வதற்காக மட்டுமே ஆகும்.. இது உலகளாவிய சந்தை சூழ்நிலையால் கட்டாயப்படுத்தப்படும் ஒரு தேவையாகும். இருப்பினும், இந்தியாவை விமர்சிக்கும் நாடுகளே ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. ரஷ்யாவுடன் அவர்கள் மேற்கொள்ளும் வர்த்தகம் என்பது எங்களைப் போல் தேச நலனுக்கான கட்டாயம் கூட அல்ல.
2024-ல் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவுடன் 67.5 பில்லியன் யூரோ மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்தைக் கொண்டிருந்தது. கூடுதலாக, 2023-ல் 17.2 பில்லியன் யூரோ மதிப்பிலான சேவை வர்த்தகத்தைக் கொண்டிருந்தது. இது அந்த ஆண்டு அல்லது அதற்குப் பிறகு ரஷ்யாவுடனான இந்தியாவின் மொத்த வர்த்தகத்தை விட கணிசமாக அதிகம். உண்மையில், 2024-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம், எல்என்ஜி எனப்படும் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதியை 16.5 மில்லியன் டன்களாகக் குறைத்தது. இது, 2022-ஆம் ஆண்டில் 15.21 மில்லியன் டன்களாக இருந்தது.
ஐரோப்பா – ரஷ்யா வர்த்தகத்தில் எரிசக்தி மட்டுமல்ல, உரங்கள், சுரங்கப் பொருட்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்களும் அடங்கும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதன் அணுசக்தித் தொழிலுக்கு யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, அதன் மின்சார உற்பத்தித் தொழிலுக்கு பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றை ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்கிறது.
இந்த விவகாரத்தில், இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது. எந்தவொரு பெரிய நாடுகளின் பொருளாதாரத்தையும் போலவே, இந்தியாவும் தனது நாட்டின் நலன்களையும், பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
பின்னணி அரசியல்: ரஷ்யா – உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் முழுமையாக நிறுத்திவிட்டன. இதைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. தற்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது.
இந்தச் சூழலில்தான் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதமும் கூடுதல் வரியும் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவில் இருந்து 4 சரக்கு கப்பல்களில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, “இந்திய, ரஷ்ய கூட்டு நிறுவனமான நயாரா, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் குஜராத்தின் வாடினார் நகரில் செயல்படுகிறது. ரஷ்யாவில் இருந்து சரக்கு கப்பல்களில் வரும் கச்சா எண்ணெய் இந்த நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இங்கிருந்து ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் 100 சரக்கு கப்பல்கள் மற்றும் நயாரா நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பேரல்களுடன் 4 சரக்கு கப்பல்கள் குஜராத் வந்துள்ளன. இவை வாடினாரில் உள்ள நயாரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய துறைமுகத்துக்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக அருகில் உள்ள முந்த்ரா துறைமுகத்துக்கு 4 சரக்கு கப்பல்களும் சென்றுள்ளன. இதன்மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையில் இருந்து தப்பிக்க முடியும்” என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.