புதுடெல்லி: காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “பாகிஸ்தானுக்கு வரவேண்டிய ஒரு சொட்டு நீரைக்கூட இந்தியா நிறுத்தி வைக்க முடியாது. தண்ணீரை நிறுத்த முயற்சித்தால், மறக்க முடியாத வகையில் பாகிஸ்தான் பாடம் கற்பிக்கும். சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் வரும் தனது உரிமைகளில் பாகிஸ்தான் சமரசம் செய்து கொள்ளாது” என்றார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில், அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஹைதராபாத் எம்.பி ஒவைஸி கூறியதாவது: ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும் ஷெபாஸ் ஷெரீப் இது போல் முறையற்ற வகையில் பேசக் கூடாது. இதுபோன்ற பேச்சுக்கள் எல்லாம் இந்தியாவை பாதிக்காது.
இந்தியாவிடம் பிரம்மோஸ் என்ற தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை உள்ளது என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஒவைஸி கூறினார்.