பாதுகாப்பு அமைச்சக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதை அல்லது நிகழ்நேர செய்தியாக்குவதை அனைத்து ஊடக சேனல்கள், டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடக பயனர்கள் தவிர்க்க வேண்டும். முக்கியமான தகவல்களை முன்கூட்டியே நேரடியாக வெளியிடுவது ராணுவ படைகளின் செயல்பாட்டு திறனை சமரசம் செய்து பல உயிர்களுக்கு அது ஆபத்தை விளைவிக்கும்.
கார்கில் போர், 26/11 மும்பை தாக்குதல், காந்தஹார் விமான கடத்தல் போன்ற நிகழ்வுகளை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதி, 2021, பிரிவு 6(1)(பி)-ன் படி தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது தாக்குல் குறித்த விவரங்களை, விளங்கங்களை அளிப்பர். அதனை மட்டுமே ஊடகங்கள் ஒளிபரப்ப அனுமதிக்கப்படும்.
நாட்டின் சேவையில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்தி, செய்தி சேகரிப்பில் விழிப்புணர்வு, பொறுப்புணர்வு ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியாலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.