மதுரா: உத்தர பிரதேச மாநிலம் மதுராவின் ஷெர்கர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் (50). இவர் மதுராவில் உள்ள ஜமுனாபர் பகுதியில் தனது மாமியார் குடும்பத்துடன் வசிக்கிறார்.
இவரது குடும்பத்தில் மொத்தம் 8 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினர். அவர்களுடைய பெயர்களையும் மாற்றிக் கொண்டனர். ஜாகிர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்து மதத்துக்கு மாறும் வேத சடங்குகள் விருந்தாவனில் நேற்று முன்தினம் நடந்தன.
ஜாகிர் தனது பெயரை ஜகதீஷ் என்று மாற்றிக் கொண்டுள்ளார். அதேபோல் அவரது குடும்பத்தினர் இந்துக்களின் பெயர்களை வைத்துக் கொண்டனர். இதுகுறித்து ஜகதீஷ் கூறியதாவது: இந்தியாவில் முகலாயர்கள் படையெடுப்புக்கு முன்னர் எங்களுடைய மூதாதையர்கள் எல்லாம் இந்துக்களாக இருந்தவர்கள்தான். அவர்களை கட்டாய மதமாற்றம் செய்துள்ளனர். எனினும், என்னுடைய மனம், சொல், செயல் அனைத்தும் காளியை வணங்குவதாக இருக்கிறது. என் கிராம மக்கள் கூட என்னை பகத் ஜி என்றுதான் அழைப்பார்கள். முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு திரும்பியது மீண்டும் எங்கள் வீட்டுக்கு திரும்பும் செயலாகும். எங்கள் மூதாதையர்களின் நம்பிக்கையை தொடர இவ்வாறு இந்துக்களாக மாறினோம். நாங்கள் மதம் மாற யாருடைய துாண்டுதலும் இல்லை. நாங்களாக விருப்பப்பட்டுதான் மாறினோம். எங்கள் குடும்பம் குஜ்ஜார் இனத்தை சேர்ந்தது. இந்து மதத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து நாங்கள் வீடு திரும்பியுள்ளோம். இவ்வாறு ஜகதீஷ் கூறினார்.
விருந்தாவனில் உள்ள பகவத் தாம் ஆசிரமத்தில் இந்து மதத்துக்கு மாறும் வேத சடங்கள் நடைபெற்றன. யாகங்கள் நடத்தப்பட்டன. ஜகதீஷ் மனைவி, மகன்கள், மருமகள், பேரக் குழந்தைகள் என 8 பேர் முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினர். இதுகுறித்து இந்து யுவ வாகினி ஆர்வலர் சரத் சைனி கூறும்போது, ‘‘ஜாகிர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கங்கை நதிநீரால் புனிதம் செய்யப்பட்டு காவி உடை அணிந்து இந்து மத சடங்குகளில் பங்கேற்றனர். இந்த முடிவை விருப்பப்பட்டு எடுத்துள்ளனர். அதற்கு ஜாகிரின் மகன்களும் ஆதரவு அளித்துள்ளனர்’’ என்றார்.