புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் முதன்முறையாக மதுபானத் தொழிலுக்கான மெகா முதலீட்டு மாநாடு இன்று (ஜுலை 10) நடைபெற உள்ளது. இதில், ரூ.5,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி.யில் பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க முதலீட்டு மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதன்முறையாக மது உற்பத்தியை ஊக்குவிக்கும் முதலீட்டு மாநாடும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை லக்னோவின் இந்திரா காந்தி பிரதிஷ்டானில் மாநில கலால் துறை நடத்துகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் எனவும் சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி.யில் பிற தொழில்களுடன் இணைந்து மதுபான தயாரிப்புக்கும் கடந்த ஆண்டுகளில் முதலீட்டு திட்டங்கள் கையெழுத்தாகின. அவற்றில் சில தற்போது செயல்பாட்டில் உள்ளன. இச்சூழலில், உ.பி.யில் மதுபான உற்பத்தி அதிகரித்தால் அரசுக்கு கலால் வரி வருமானம் அதிகரிக்கும் என்பதால் மதுபானத் தொழிலுக்கு என தனி மாநாடு நடைபெறுகிறது.
இதுகுறித்து உ.பி. கலால் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) நிதின் அகர்வால் கூறுகையில், “கடந்த ஆண்டுகளில் ‘இன்வெஸ்ட் உ.பி.’ திட்டம் மூலம் மாநிலத்தில் மதுபானம் அடிப்படையிலான தொழில்களில் ரூ.39,479.39 கோடி முதலீட்டுக்கான 142 திட்டங்கள் பெறப்பட்டன. இதற்காக 135 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றில் 46 நிறுவனங்கள் ரூ.7,888.73 கோடியை முதலீடு செய்கின்றன. 19 நிறுவனங்கள் ரூ.2,339.6 கோடியை முதலீடு செய்து உற்பத்தியை தொடங்கியுள்ளன’’ என்றார்.
உபி அரசின் கலால் கொள்கையின் கீழ், நடப்பு நிதியாண்டில் 3,171 உள்நாட்டு மதுபானக் கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், 3,392 பியர் கடைகள் மற்றும் 2,799 வெளிநாட்டு மதுபானக் கடைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் 2,791 உள்நாட்டு மதுபானக் கடைகளில் பியர் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2016-17-ம் ஆண்டில் உ.பி. கலால் துறை ரூ.14,273.33 கோடி வருவாய் ஈட்டியது. இது, 2024-25-ம் ஆண்டில் ரூ.52,573.07 கோடியாக அதிகரித்துள்ளது. உயிரி எரிபொருள் கொள்கையின் கீழ் உத்தரபிரதேசம் 182.6 கோடி லிட்டர் பவர் ஆல்கஹால் உற்பத்தி செய்து நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.