புதுடெல்லி: மேற்கு உ.பி.யின் மீரட் மாவட்டம், தாத்ரி கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. இதன் பூசாரியாக கிருஷ்ணா என்ற பெயரில் இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வந்தார். கோயிலின் உள்ளேயே தங்கிவந்த அவரது நடவடிக்கையில் கிராமவாசிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இத்துடன், கோயில் உண்டியலில் பணம் குறைவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது ஆதார் அட்டையை வாங்கிப் பார்த்த பிறகு அவர் கிருஷ்ணா அல்ல காசீம் எனத் தெரியவந்ததது.
பிறகு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட காசீம் கைது செய்யப்பட்டார். விசாரணையில், காசீம் பிஹாரின் சீதாமடியைச் சேர்ந்த அல்தாப் என்பவரின் மகன் எனத் தெரியவந்தது. இதற்கிடையில் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கருதப்பட்டதை தொடர்ந்து. அகில இந்திய இந்து பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான சச்சின் சிரோஹி தனது சகாக்களுடன் கங்கை நீர் மற்றும் பால் ஊற்றி கோயிலை சுத்தப்படுத்தினார்
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சச்சின் சிரோஹி கூறும்போது, “கிராமத்தின் இளம் பெண்களுடனும் நட்பு வளர்க்க காசீம் முயன்றுள்ளார். இதன் மூலம் அவர் லவ் ஜிஹாத் செய்ய முயற்சித்துள்ளார். இது போன்ற பிரச்சினைகளை தடுக்க உ.பி.யின் அனைத்து கோயில் பூசாரிகள், பண்டிதர்களின் அடையாளத்தை விசாரித்து உறுதிப்படுத்துவது அவசியம்” என்றார்.
இதற்குமுன், மீரட்டின் சனி பகவான் கோயிலிலும் இதுபோன்ற சம்பவம் 2023-ல் நடந்தது. இங்கு குர்ஜர்நாத் என்ற பெயரில் ஒருவர் பூசாரியாக பணியாற்றி வந்தார். 6 மாதங்களுக்கு பிறகு அவர் குர்ஜர்நாத் அல்ல குல்லு இஸ்மாயில் கான் என தெரியவந்தது. இதையடுத்து குல்லு கைது செய்ப்பட்டார்.