புதுடெல்லி: உக்ரைன் போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் தொலைபேசியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமரச முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கடந்த 15-ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் சந்தித்துப் பேசினர். மூன்று மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. எனினும் பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நெருங்கிய நட்பு நாடுகளிடம் விவரித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அதிபர் புதின் நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில்பேசினார். அப்போது உக்ரைன் போர் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேசிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் அதிபர் புதின் எடுத்துரைத்தார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “அதிபர் ட்ரம்புடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை ரஷ்ய அதிபர் புதின் என்னோடு பகிர்ந்து கொண்டார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உக்ரைன் விவகாரத்தில் சுமுக தீர்வு எட்டப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விவகாரம்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதன்காரணமாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகவும் பிரதமர் மோடியும் அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இப்போதைய சர்வதேச சூழலில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா நாடுகள் இடையே நெருக்கம் அதிகரித்து வருகிறது.