பாட்னா: பிஹாரில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஐனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கடந்த சனிக்கிழமை குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் ‘ஆர்ஏபி2916120’ என்ற எண்ணுடைய வாக்காளர் அட்டையை செய்தியாளர்களிடம் காட்டினார்.
தேஜஸ்வியின் புகாரை தேர்தல் ஆணையம் உடனடியாக மறுத்தது. மேலும் தேஜஸ்விக்கு அனுப்பிய நோட்டீஸில், ‘‘சரிபார்ப்பு பணியில் உங்கள் பெயர் பிஹார் பொறியியல் பல்கலைக்கழக நூலக கட்டிடத்தில் அமைக்கப்படும் 124-வது வாக்குச் சாவடியில் 416-வது வரிசை எண்ணில் உள்ளது.
உங்கள் வாக்காளர் அட்டை எண் ஆர்ஏபி0456228 ஆகும். நீங்கள் காண்பித்தது அதிகாரப்பூர்வ அடையாள அட்டை அல்ல. எனவே விரிவான விசாரணைக்கு அந்த அட்டையை ஒரிஜினல் அடையாள அட்டையுடன் ஒப்படைக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தது.
இந்நிலையில் தேஜஸ்வி யாதவ் இரண்டு வாக்காளர் அட்டை வைத்திருப்பது தொடர்பாக பாட்னாவின் திகா காவல் நிலையத்தில் ராஜீவ் ரஞ்சன் என்ற வழக்கறிஞர் நேற்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.