சிம்லா: கடந்த இரண்டரை ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 1,200 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள இமாச்சலப் பிரதேச கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர், “கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூடப்பட்ட 1,200 பள்ளிகளில் 450 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக இருந்ததால் மூடப்பட்டன. மற்றவை குறைந்த மாணவர் சேர்க்கை காரணமாக இணைக்கப்பட்டன. மாநில அரசின் கல்வித் துறையை வலுப்படுத்த பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் பள்ளிகளை இணைப்பது மற்றும் மறுசீரமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை 25-க்கும் குறைவான மாணவர் சேர்க்கை இருந்தால், அந்த பள்ளிகளை மற்றொரு பள்ளியுடன் இணைப்பதற்கான அளவுகோல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்பி வருகிறது. தொடக்கக் கல்வித் துறையில் 3,900 பணியிடங்கள் உட்பட 15,000 ஆசிரியர் பணியிடங்களை அரசு அனுமதித்துள்ளது. இமாச்சலப் பிரதேச ராஜ்ய சயான் ஆயோக் மூலம் கூடுதலாக 3,100 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 6,200 நர்சரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
முந்தைய பாஜக ஆட்சியின்போது கல்வித் துறையில் ஆட்சேர்ப்பு செயல்முறை நிறுத்தப்பட்டது, ஆனால், தற்போதைய அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதன் மூலம் கல்வித் துறையை வலுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக முதல்வர்களின் சேவைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. உயர் கல்வித் துறையில் 483 உதவிப் பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த இரண்டரை ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் 700 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் முந்தைய பாஜக அரசின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் 511 விரிவுரையாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 2025-இல் வெளியிடப்பட்ட ‘ஆண்டு கல்வி நிலை அறிக்கை’யின்படி, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் நாட்டிலேயே சிறந்ததாக இருந்தது. இந்த கணக்கெடுப்பின் பெரும்பாலான அளவுருக்களின்படி, இமாச்சலப் பிரதேசம் நாடு தழுவிய அளவில் பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக மதிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.