இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் மிகவும் பிரபலமான மகாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள என்ஐசியூ எனப்படும் நியூநேட்டல் இன்டென்சிவ் கேர் யூனிட்டில்(பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு) பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்தப் பிரிவில் இருந்த 2 பச்சிளம் குழந்தைகளை, எலிகள் கடித்துக் குதறியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த மருத்துவமனைதான் மத்திய பிரதேச மாநிலத்திலேயே மிகப்பெரிய மருத்துவமனை என்று பெயர் பெற்றதாகும்.
அந்த சிறப்பு வாய்ந்த மருத்துவமனையின் என்ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளை எலிகள் கடித்துள்ளது மிகவும் பரபரப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்தக் குழந்தைகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனை சூப்பிரடெண்ட் டாக்டர் அசோக் யாதவ் கூறும்போது, “இந்த சம்பவம் எனக்குத் தெரியவந்ததும், குழந்தைகளை வேறு வார்டுக்கு மாற்றி சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். மருத்துவமனையில் எழுந்துள்ள எலி பிரச்சினையை உடனடியாக சீர் செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.