கொலம்பியா: “இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது ஆளும் பாஜக” என்று கொலம்பியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி பேசினார்.
கொலம்பியாவில் உள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் இடையிலான உரையாடல் தேவை. அதேபோல, இந்தியாவில் வெவ்வேறு மரபுகள், மதங்கள், கருத்துகளுக்கும் இடம் தேவை. அந்த இடத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழி ஜனநாயக அமைப்புதான். தற்போது, ஆளும் பாஜக அரசில் ஜனநாயக அமைப்பின் மீது முழுமையாக தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்தான் மிகப் பெரிய ஆபத்து.
சீனா செய்வதை நாங்கள் செய்ய முடியாது. அந்த நாடு மக்களை அடக்கி ஒரு சர்வாதிகார அமைப்பை நடத்துகிறது. எங்கள் நாட்டின் அமைப்பு அதை ஏற்றுக்கொள்ளாது. 2016-இல் பாஜக அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு கொள்கை மிகப் பெரிய தோல்வியடைந்தது. கருப்பு பணத்தை ஒழித்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் அவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். கொள்கையாக அது தோல்வியை தழுவியது.
அதிகாரப் பரவலாக்கல்தான் ஊழலை ஒழிப்பதற்கான ஒரு பயனுள்ள வழி. ஆனால், இந்தியாவில் ஆளும் பாஜக அரசாங்கத்தில் பரவலான ஊழல் உள்ளது. இந்தியாவில், இப்போது மிகவும் மையப்படுத்தப்பட்ட மட்டத்தில் மிகப் பெரிய அளவிலான ஊழல் உள்ளது. பிரதமருடன் நேரடி உறவைக் கொண்ட மூன்று, நான்கு வணிகங்கள் முழு பொருளாதாரத்தையும் கைப்பற்றுகின்றன. இந்தியாவில் இப்போது ஊழல் பரவலாக உள்ளது” என்று ராகுல் காந்தி பேசினார்.