புதுடெல்லி: இந்திய கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சப் லெப்டினன்ட் ஆஸ்தா பூனியா பெற்றுள்ளார்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் இந்திய கடற்படை நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடற்படை விமானப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இரண்டாவது அடிப்படை ஹாக் கன்வெர்ஷன் படிப்பின் பட்டமளிப்பு விழா விசாகப்பட்டினம் ஐஎன்எஸ் டேகா விமான தளத்தில் ஜூலை 3-ம் தேதி நடைபெற்றது.
இதில் லெப்டினன்ட் அதுல் குமார் துல், சப் லெப்டினன்ட் ஆஸ்தா பூனியா ஆகிய இவரும் கவுரவமிக்க ‘விங்ஸ் ஆப் கோல்டு’ விருதை ரியர் அட்மிரல் ஜானக் பெல்வியிடம் இருந்து பெற்றனர். இந்திய கடற்படையில் போர் விமானியாக பயிற்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சப் லெப்டினன்ட் ஆஸ்தா பூனியா பெற்றுள்ளார்.
இதன் மூலம் இந்திய கடற்படை ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல் கல்லை எட்டியுள்ளது. தடைகளை உடைத்து, கடற்படையில் பெண் போர் விமானிகளின் புதிய சகாப்தத்திற்கு ஆஸ்தா பூனியா வழி வகுத்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.