மும்பை: ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் உடன் விளையாடுகிறது என்ற அறிவிப்பு வெளியானது முதல் இந்த ஆட்டத்தில் இந்தியா விளையாடக் கூடாது என்ற குரல் ஒலித்து வருகிறது. அதற்கான காரணமாக பஹல்காம் தாக்குதல் அமைந்துள்ளது. இந்த சூழலில் இப்போட்டி குறித்து ஆர்பிஜி குழும தலைவர் ஹர்ஷ் கோயங்கா.
“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை பார்க்க வேண்டாம் என மனம் சொல்கிறது. அது முக்கியம் அல்ல என புத்தி சொல்கிறது. ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என தேசப்பற்று சொல்கிறது. அணியை உற்சாகப்படுத்த வேண்டும் என அறிவு சொல்கிறது. என மை-பாக்ஸ் கூட கலவையான சமிக்ஞைகளை கொடுத்துள்ளனர். இந்த பூமியில் நான் என்ன செய்ய?” என ஹர்ஷ் கோயங்கா ட்வீட் செய்துள்ளார்.
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் கடந்த 10-ம் தேதி விளையாடி வெற்றி பெற்றது. இந்நிலையில், நாளை (செப்.14) பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுகிறது.
இதனிடையே கடந்த ஏப்ரலில் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதலை நடத்தியது.
ஏற்கெனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்டில் இந்திய அணி பங்கேற்பதில்லை என்ற முடிவு கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இது மேலும் தீவிரமானது. இதனால் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட கூடாது என்று எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது. இந்த போட்டிக்கு தடை கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.