புதுடெல்லி: அமெரிக்கா-இந்தியா வரி பிரச்சினை பூதாகரமாகி வரும் நிலையில், “இந்தியா வல்லரசாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது” என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையாக அமெரிக்காவை விமர்சித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ரைசன் என்ற பகுதியில் ரயில் உற்பத்தி மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் பேசியபோது, “இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், அதனை சிலர் விரும்புவதில்லை, பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. எல்லோருக்கும் முதலாளி என்று தன்னை நினைக்கும் சிலர், இந்தியாவின் வேகமான வளர்ச்சி பற்றி யோசனை செய்கின்றனர்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையை அதிகமானதாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். அப்படி, விலையேறினால் இந்திய பொருள்களை மற்ற நாடுகள் வாங்குவதை நிறுத்தும் என்று கருதுகின்றனர். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா தொடர்ந்து வேகமாக முன்னேறிக் கொண்டேதான் இருக்கிறது. இந்தியா வல்லரசாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. தற்போது, பாதுகாப்புத் துறைசார்ந்த ஏற்றுமதிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. நாட்டின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதுதான் இந்தியாவின் பலம்” என்று தெரிவித்தார்.