புதுடெல்லி: இந்தியாவின் முன்கூட்டியே அளித்த வெள்ள எச்சரிக்கையால் 1.5 லட்சம் பாகிஸ்தானியர்கள் உயிர் தப்பி உள்ளனர்.
காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானை நோக்கி பாயும் ராவி, சட்லெஜ், செனாப் ஆகிய ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீரில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கடந்த திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை என தொடர்ந்து பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது. இதன் அடிப்படையில், ஆற்றங் கரையோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1.5 லட்சம் பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் உயிர் தப்பி உள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததால் 1.5 லட்சம் பாகிஸ்தானியர்கள் உயிர் தப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பசில்கா மாவட்டம் தேஜா ரோஹேலா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். அவனைக் காப்பாற்ற முயன்ற மேலும் 3 பேர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதனிடையே, அவர்கள் வழியில் இருந்த யூகளிப்டஸ் மரங்களில் ஏறிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.