புதுடெல்லி: அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போது, உலக நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரி பட்டியலை வெளியிட்டார். இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர் இந்த புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதன்படி, கடந்த ஜூலை 9-ம் தேதி கெடு முடிய இருந்த நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டித்தார்.
இதனிடையே, பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் ஜப்பான், இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதுபோல இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. வரி விதிப்பு அமலாவதற்கான காலக்கெடு (ஆகஸ்ட் 1) நெருங்கிவிட்ட நிலையில், இரு நாடுகளுக்கிடையே இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வரும் 25-ம் தேதி அமெரிக்க குழு இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.