புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிகாப்டர்களில், முதல் 3 ஹெலிகாப்டர்கள் இம்மாதம் விநியோகிக்கப்பட உள்ளன.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அபாச்சி கன்ஷிப்ஸ் ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கிறது. இதில் இயந்திர துப்பாக்கி, வானிலிருந்து தரை இலக்குகளை மற்றும் வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இது ‘வானில் இயங்கும் டேங்க்’ என அழைக்கப்படுகிறது. இந்திய விமானப் படைக்கு 22 அபாச்சி ஹெலிகாப்டர்கள் ரூ.13,952 கோடிக்கு கடந்த 2015-ம் ஆண்டு வாங்கப்பட்டு படையில் சேர்க்கப்பட்டன. இதில் ஒன்று கடந்தாண்டு லடாக்கில் தரையிறங்கும் போது பலத்த சேதம் அடைந்தது.
தரைப்படை பயன்பாட்டுக்காக 6 அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ரூ.5,691 கோடிக்கு வாங்க கடந்த 2020-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஹெலிகாப்டர்கள் விநியோகம் தாமதம் ஆகி வந்தது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத்திடம், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்கிழமை போனில் பேசினார். அப்போது முதல் 3 அபாச்சி ஹெலிகாப்டர்களை இம்மாதமும், அடுத்த 3 ஹெலிகாப்டர்கள் நவம்பர் மாதமும் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவு பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜோத்பூரில் அமைக்கப்படுகிறது.
ரூ.1 லட்சம் கோடி தளவாடம்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்பு 12 கண்ணி வெடி போர்க்கப்பல்கள், ரூ.44,000 கோடி மதிப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்படவுள்ளன. டிஆர்டிஓ தயாரிக்கும் தரையிலிருந்து வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள், இஸ்டார் என்ற கண்காணிப்பு விமானங்கள், கடற்படை பயன்பாட்டுக்காக உளவு பார்க்கும் சிறிய ரக நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும் 76 எம்எம் துப்பாக்கிகள் என ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தளவாடங்கள் முப்படைகளுக்காக கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்புதலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.