புதுடெல்லி: இந்தியாவின் மிக நீண்ட கால உள்துறை அமைச்சர் என்ற பெருமையை அமித் ஷா பெற்றுள்ளார். பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் முந்தைய சாதனையை அவர் முறியடித்தார். கடந்த 2019-ம் ஆண்டு மே 30-ம் தேதி முதல் நாட்டின் உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவி வகித்து வருகிறார். அவர் நேற்று 2,258 நாட்கள் (6 ஆண்டுகள் 68 நாட்கள்) பதவிக் காலத்தை முடித்து நாட்டின் மிக நீண்டகால உள்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கடந்த 2019, ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதை நாடாளுமன்றத்தில் அமித் ஷா அறிவித்தார். அதே ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் வல்லப பந்த், பாஜக தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சராக மிக நீண்ட காலம் பணியாற்றியுள்ளனர்.
எல்.கே.அத்வானி 2,256 நாட்கள் (1998 மார்ச் 19 முதல் 2004 மே 22 வரை) இப்பதவியில் இருந்தார். கோவிந்த் வல்லப பந்த் 6 ஆண்டுகள் 56 நாட்கள் (1955 ஜனவரி 10 முதல் 1961 மார்ச் 7 வரை) இப்பதவி வகித்தார். மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா முதன்முதலில் 2019, மே 30-ம் தேதி நியமிக்கப்பட்டார். 2024, ஜூன் 10-ம் தேதி அவர் அப்பொறுப்பில் மீண்டும் நியமிக்கப்பட்டார். கூடுதலாக, நாட்டின் முதல் கூட்டுறவு அமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன் பாஜக தேசிய தலைவர், குஜராத் உள்துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகளை அமித் ஷா வகித்துள்ளார். சமீபத்திய என்டிஏ கூட்டத்தில் அமித் ஷாவின் பங்களிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார், மேலும் இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் உள்துறை அமைச்சராக பணியாற்றியதற்காக அவரை பாராட்டினார்.