சென்னை: இஸ்ரோவின் ஆளில்லா முதல் விண்கலம் டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘நாசா இஸ்ரோ சிந்தடிக் அபெர்ச்சர் ரேடார்’ (நிசார்) என்ற செயற்கைக்கோள் வரும் 30-ம் தேதி (நாளை) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் உள்ள எஸ்-பேண்ட் சிந்தடிக் அபெர்ச்சர் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.
மேகமூட்டம், மழை என எந்த சூழலாக இருந்தாலும், இரவு – பகல் என 24 மணி நேரமும் பூமியை இந்த செயற்கைக் கோள் துல்லியமாக புகைப்படம் எடுக்கும். பூமியில் உள்ள இயற்கை வளங்களை கண்டுபிடிக்கவும், நிலச்சரிவு போன்ற பேரிடர் பாதிப்புகளை கண்டறியவும் இது உதவும்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பு ஆளில்லாத 3 விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும். அதற்கான முதல் விண்கலம் ஹரிகோட்டாவில் தயாராகி வருகிறது. வரும் டிசம்பரில் அதை அனுப்ப உள்ளோம். அதில் மனிதருக்கு பதிலாக ரோபோட்டை வைத்து அனுப்ப இருக்கிறோம். இந்த திட்டம் வெற்றியடைந்தால், 2026-ல் மேலும் 2 ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்படும். இந்த சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு, 2027 மார்ச்சில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவோம்.
நிலவில் இறங்கி மாதிரிகளை எடுத்து வருவதற்கான ‘சந்திரயான் 4’ பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருகின்றன. இது 2027-ல் செலுத்தப்படும். ஜப்பானுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வரும் ‘சந்திரயான் 5’, நிலவுக்கு 2028-ல் அனுப்பப்படும். சந்திரயான்-5 நிலவில் 100 நாட்கள் ஆய்வு பணியில் இருக்கும். நாம் அனுப்பிய 55 செயற்கைக் கோள்கள், தற்போது விண்ணில் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கையை அடுத்த 4 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிக்கும் வகையில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.