திருப்பதி: ஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினம் முதல் மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியான இதனை அமல்படுத்த தீவிர ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆந்திர மாநில அரசு பஸ் போக்குவரத்து கழக (ஏபிஎஸ்ஆர்டிசி) நிர்வாக இயக்குநர் துவாரகா திருமலராவ் திருப்பதி அடுத்துள்ள வெங்கடகிரி வாகாடு பேருந்து பணிமனையை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்துக்காக தற்போது வரை 750 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. மேலும் 600 பேருந்துகள் வர உள்ளன. அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.
மொத்தம் உள்ள 11,000 பேருந்துகளில் 74 சதவீத பேருந்துகள் மகளிர் இலவச பயண திட்டத்துக்காக ஒதுக்கப்பட உள்ளன. இத்திட்டம் ஒருங்கிணைந்த மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். அனைத்து பஸ் நிலையங்களிலும் குடிநீர், கழிப்பறை, மின்விசிறி, நாற்காலி வசதிகள் செய்து தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்