விஜயவாடா: ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசே மதுபான கடைகளை ஏற்று நடத்தியது. அப்போது, ஜெகன் கட்சியை சேர்ந்த சிலரின் மது தயாரிப்பு தொழிற்சாலைகள் மூலமாக தரம் குறைந்த மதுபானங்களை மார்க்கெட்டில் விற்றது. இதனால் பலரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஜெகன் ஆட்சியில் அரசுக்கு ரூ.3,500 கோடி வரை மது விற்பனையால் நஷ்டம் ஏற்பட்டது சிறப்பு விசாரணை குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்பேரில் இதுவரை பலரை இக்குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதில், ஜெகன் கட்சியை சேர்ந்த ராஜம்பேட்டை நாடாளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டியை விசாரணை குழு 4 வது குற்றயாக சேர்த்துள்ளது. இந்த நிலையில் மிதுன் ரெட்டி, தனக்கு இந்த வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், தனக்கு இவ்வழக்கில் முன் ஜாமீன் வழங்கிட வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் மூலம் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு குறித்து விசாரணையின்போது இருபக்க வாதங்களையும் கேட்ட நீதிபதி, மிதுன்ரெட்டியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ஜெகன் கட்சியை சேர்ந்த எம்பி மிதுன் ரெட்டி விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மிதுன் ரெட்டி மேல் முறையீடு செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.