நெல்லூர்: ஆந்திர மாநிலம், நெல்லூர் குர்ரம்வாரி வீதியை சேர்ந்த பால வெங்கைய்யா (40) என்பவரின் குடும்பத்தினர் கடப்பா மாவட்டம், ஆத்மகூர் எனும் ஊரில் உறவினர் ஒருவரின் குடும்பத்தாரை துக்கம் விசாரிக்க காரில் நேற்று காலை புறப்பட்டனர்.
அப்போது, நெல்லூர் மாவட்டம், சங்கம் அருகே வெரமன் எனும் எனும் இடத்தில், மும்பை தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் எதிரே அதிவேகமாக தவறான பாதையில் வந்த டிப்பர் லாரி, இவர்களின் கார் மீது வேகமாக மோதியது. இதில் கார் டிப்பர் லாரியின் அடியில் சிக்கி கொண்டது.
இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த பால வெங்கைய்யா (40), இவரது மனைவி ராதா (38), இவரின் சகோதரர் நிவாசுலு (42), நிவாசுலுவின் மனைவி லட்சுமி (40), உறவினர் ஷேரம்மா (42), ஓட்டுனர் தெல்ல குண்ட்ல நிவாசுலு (48) மற்றும் 4 வயது சிறுவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். டிப்பர் லாரி ஓட்டுனரின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்ததும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்ததோடு, இது குறித்து விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.