கயா: இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் மீதும் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி 16 நாள் யாத்திரையை தொடங்கியுள்ளார். யாத்திரையின் இரண்டாவது நாளான நேற்று கயாவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையத்தின் ‘வாக்கு திருட்டு’ பிடிபட்ட பிறகும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு என்னிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. ‘வாக்கு திருட்டு’ என்பது பாரத மாதாவின் ஆன்மாவின் மீதான தாக்குதல்.
எங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள், ஒவ்வொரு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதியிலும் உங்கள் திருட்டை நாங்கள் கண்டுபிடித்து, மக்கள் முன் வைப்போம். அப்போது முழு நாடும் உங்களிடம் பிரமாணப் பத்திரம் கேட்கும் என்று நான் தேர்தல் ஆணையத்திடம் சொல்ல விரும்புகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி சிறப்புத் தொகுப்பு பற்றிப் பேசுவது போல, தேர்தல் ஆணையம் பிஹாருக்கு சிறப்பு தீவிர திருத்தம் என்ற சிறப்புத் தொகுப்பு ஒன்றைக் கொண்டு வந்துள்ளது, அதாவது புதிய வடிவிலான வாக்குத் திருட்டு. தேர்தல் ஆணையர்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும் ஒரே குரலில் தங்கள் மாநிலத்தில் ‘வாக்கு திருட்டு’ செய்ய முடியாது என்று பிஹார் மக்கள் கூறுவார்கள்.
இந்த மூன்று தேர்தல் ஆணையர்களும், பாஜக உறுப்பினராகி அவர்களுக்காக வேலை செய்யுங்கள் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார். ஆனால், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். பிஹாரிலும், டெல்லியிலும் இண்டியா கூட்டணி அரசாங்கம் அமையும் ஒரு நாள் வரும்; அப்போது உங்கள் மூவர் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் முழு நாட்டிலிருந்தும் வாக்குகளை திருடிவிட்டீர்கள்.” என்று அவர் கூறினார்.