பெங்களூரு: அல்காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 30 வயது பெண் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் அல்காய்தா தீவிரவாத அமைப்பின் சித்தாந்ததை விதைக்கும் நோக்கில் முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டிவிட்டு இந்திய அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதாக குஜராத் தீவிரவாத ஒழிப்பு படைக்கு மின் அஞ்சல் வந்தது.
இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த வாரத்தில் அகமதாபாத்தை சேர்ந்த ஃபர்தீன் ஷேக் (24) உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர். இந்த நால்வரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் நாட்டில் அல்காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வேறு சிலரின் பெயர்களும் கிடைத்தன.
அதன் அடிப்படையில் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் பெங்களூருவை சேர்ந்த சாமா பர்வீன் (30) என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவர் அல்காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாமா பர்வீன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.