புதுடெல்லி: டெல்லியில் தனக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன் என்பது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும், அரசு பங்களாவை அவர் காலி செய்யாமல் இருப்பதாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து, டி.ஒய்.சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: எனது மகள்கள் பிரியங்கா (16) மற்றும் மஹி (14) மரபணுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த நோய்க்கு இந்தியாவில் மட்டுமல்ல. உலகின் எந்த இடத்திலும் மருத்துவ சிகிச்சை கிடையாது. அவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை வசதிகளை செய்து தந்துள்ளோம்.
அவர்களின் தனியுரிமைக்காக கழிப்பறை மற்றும் வீட்டின் பிற பகுதிகளுக்கு சக்கர நாற்காலி செல்லும் வகையில் புதிய வீட்டை வடிவமைக்க வேண்டிய தேவை இருந்தது. என்னுடைய கட்டிட ஒப்பந்ததாரர் ஜூன் இறுதிவரை புதிய வீட்டின் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறும் எனக் கூறியதால், அப்போதைய தலைமை நீதிபதியிடன் கடிதம் அளித்து தங்குவதற்கு ஒப்புதல் பெற்றிருந்தேன். மேலும், எங்கள் வீட்டில் சிறிய அவசர சிகிச்சைப் பிரிவு(ஐசியூ) உள்ளது. எனது மகளுக்கு நள்ளிரவில் உடல்நிலை மோசமடைந்தால் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்.
எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு மட்டுமே அவர்களது நிலைமை தெரியும். நான் தற்போது தங்கியிருக்கும் வீடு முழுவதும் உள்ள பொருள்களை புதிய வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் புதிய வீட்டுக்கு மாறிவிட்டு அதுதொடர்பான ஆவணங்களை நீதிமன்ற நிர்வாகத்திடமும், மத்திய அரசுக்கும் தெரிவிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். நீதிபதி சந்திரசூட்டுக்கு அபிநவ், சிந்தன் என 2 மகன்களும் உள்ளனர். அவர்கள் இருவருமே வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.