புதுடெல்லி: அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்யாவின் செய்தி நிறுவனமான ஆர்டி-க்கு நேற்று அளித்த பேட்டியில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியதாவது: ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்யக் கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளை விதிப்பதன் மூலம் அமெரிக்காவானது இந்தியாவுடனான அதன் நல்லுறவுகளை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தடை அச்சுறுத்தல்களால் தங்களை நம்பகத்தன்மையற்ற நாடுகளாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளன. அமெரிக்காவிலிருந்து வரும் அச்சுறுத்தல்கள் நிச்சயமாக இந்தியாவுக்கு நம்பிக்கையைத் தரவில்லை. அமெரிக்கா நம்பகத்தன்மையற்ற கூட்டாளி நாடாகவே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.